உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை...
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் சாதனை படைத்திருக்கிறார்.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை நிகத் ஜரீன், அரைஇறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை அவர் வீழ்த்தினார். இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
தொடர்ந்து மகளிருக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்பாங் ஜூடாமஸை எதிர்கொண்டார் நிகத். தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய நிகாத் ஜரீன் , 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதே ஆன நிகாத் ஜரீன், கடந்த 2019ம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகத், கால் இறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்திலும் 5 - 0 என்கிற கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறார். இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனை என்கிற பெருமையை பெறுகிறார். நிகாத் ஜரீன். முன்னதாக மேரி கோம், சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னி (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.