நான் அதிரடியாக ஆடியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது - ரோகித் சர்மா நெகிழ்ச்சி

 
rohit

நேற்றைய போட்டியில் தான் அதிரடியாக விளையாடியது தனக்கே ஆச்சரியமாக இருந்ததாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை குறுக்கிட்டதால் போட்டி 8 ஓவராக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாற் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீச்சிய அக்‌ஷேர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

axar

இதனையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. கே.எல்.ராகுல் 10 ரன்னுக்கு வெளியேறினார். 11 ரன்னும், பாண்ட்யா 9 ரன்னும் எடுத்து வெளியேறினர். மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்தி ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு1 என சமனிலையில் உள்ளது. 

Rohit

இந்த வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- நான் அதிரடியாக ஆடியது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நன்றாக அமையும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. விளையாடும் போது நம்மால் அதிகமாக திட்டமிட இயலாது. நிலைமையை சாதகமாக பயன்படுத்துவதே ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மெதுவாகவும், சீராகவும் அவர் தனது பந்து வீச்சு நிலைக்கு வந்துள்ளார். நாங்கள் ஒரு குழுவாக இருப்பதால் அதை பெரிதாக அலச போவதில்லை. அக்‌ஷர் படேல் தனது பங்களிப்பை சரியான முறையில் பொருத்தி இருக்கிறார். ஆட்டத்தின் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக வீச இயலும் என்பதை நிரூபித்து இருக்கிறார். இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.