ஸ்டார் பவுலருக்கு காயம்... சிக்கலில் தெ.ஆப்பிரிக்கா - ஜாலி மோடில் இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 16ஆம் தேதியே தனி விமானம் மூலம் டெஸ்ட் வீரர்ங்கள் அங்கு சென்றுவிட்டனர். ஒமைக்ரான் பரவல் காரணமாக கடுமையான பயோ பபுள் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தெரியாமல் ஒரு ஈ, காக்கா கூட வீரர்களை நெருங்க முடியாது. அதேபோல வீரர்களும் பயோ பபுள் ரேடாரை தாண்டி எங்கும் செல்ல முடியாது. ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் எந்தவிதமான குறையும் இல்லாமல் இந்திய ஏ, தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடந்துமுடிந்தது.
இதை மனதில் வைத்தே எதிர்ப்பையும் மீறி இந்தியா-தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது. இதில் விளையாடும் அணி வீரர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி 21 பேரை தென்னாப்பிரிக்க அணி அறிவித்திருந்தது. அதில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆன்ரிக் நோர்க்யாவும் ஒருவர். அவருக்கு தான் தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. நோர்க்கியா தொடர்ந்து காயத்தால் அவதிப்படுகிறார்.
இதனால் அவருக்கு முழுமையான ஓய்வு தேவை. ஆகவே டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவர் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் ஆட மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயத்தால் இந்திய அணியிலிருந்து விலகியுள்ளனர். காயத்திலிருந்து மீள்வதற்காக இருவருமே பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றுள்ளனர். இதில் ரோஹித் சர்மா ஒருநாள் தொடரில் வந்துவிடுவார். ஆனால் ஜடேஜாவின் நிலை என்னவென்று தெரியவில்லை.