ஹரியானாவில் கேலோ இந்தியா... சென்னையில் தகுதிச்சுற்று - கூடைப்பந்து வீரர்களுக்கு அழைப்பு!
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து, அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டி இந்தாண்டு ஹரியானாவில் நடைபெறவிருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்கான தகுதித்தேர்வு போட்டிகள் சென்னையில் நடைபெறவிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டும் இருக்கிறது. அந்த வகையில் மாநில கூடைப்பந்து அணி தேர்வில் பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்கள் வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வகையில் நாமக்கல் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிடுள்ள அறிக்கையில், "கேலோ இந்தியா இளையோர் தேசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. அதற்கான மாநில அளவிலான கூடைப்பந்து தேர்வுப் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நாளை (1ஆம் தேதி) காலை 6.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
இத்தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பள்ளி உறுதிச் (போனபைடு) சான்றிதழ், வயது சான்றிதழ், அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆவணங்களை எடுத்துச் சென்று தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.