ஒமைக்ரான் அச்சம்... தென் ஆப்பிரிக்க தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ - கிரிக்கெட் ரசிகர்கள் ஷாக்!
தென் ஆப்பிரிக்காவில்தான் ஒமைக்ரான் கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது 38 நாடுகளுக்குப் பரவியிருந்தாலும், தென் ஆப்பிரிக்காவில் தான் அதிகளவில் பரவி வருகிறது. இன்னும் 2 வாரங்களில் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்தியுள்ளன. குறிப்பாக அதிக பரவல் கொண்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை ரத்துசெய்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை விமான சேவைக்கு தடை விதிக்கப்படவில்லை. மாறாக அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. கட்டாய ஆர்டிபிசிஆர் சோதனை, தொற்று இல்லாவிட்டாலும் கட்டாய வீட்டு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருந்தாலும் தென் ஆப்பிரிக்க உடனான விளையாட்டு தொடர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகவே பிசிசிஐயும் அந்நாட்டுடனான் தொடரை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, தென் ஆப்பிரிக்க உடனான கிரிக்கெட் தொடரில் டி20 போட்டிகளை மட்டும் தள்ளிவைப்பதாக கூறியுள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சொல்லியுள்ளார். முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள், நான்கு டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. இதில் டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது.
ஜனவரி 16ஆம் தேதி மூன்றாம் ஒருநாள் முடிவடைகிறது. இந்த 6 போட்டிகளிலும் இந்திய அணி திட்டமிட்டபடி விளையாடும். இதற்காக விரைவில் தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். பிசிசிஐயின் இந்த முடிவுக்கு நிச்சயம் எதிர்ப்புக் குரல் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.