முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி முதன் இன்னிங்சில் 400 ரன்கள் சேர்ப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுஷேன் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார் வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா-அக்சர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தனர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல், 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.