கோப்பையை வெல்லுமா இந்தியா? - வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் தேவை

 
ind

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது.  

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.

ind

 
 
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஹானே 89 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி  நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் 18 ரன்களிலும், ரோகித் சர்மா 43 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இதேபோல் புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே மற்றும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  இதனால் இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவை. விராட் கோலி 44 ரன்னிலும், ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.