விராட் கோலி அபாரம் - முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் சேர்ப்பு

 
ind

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலவதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில்  நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சுப்மன் கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோல் ரோகித் சர்மா 80 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

ind


 
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் அடித்தார். 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ரன் அவுட்டானார். ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த இஷான் கிஷான் 25 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது.