ஃபர்பார்மன்ஸ் சரியில்லை... விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு வீராங்கனை தற்கொலை!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனையான குஷ் சீரத் கவுர் சந்து துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயதேயான கவுர் சந்து பெற்றோருடன் ஃபரித்கோட் என்ற பகுதியில் வசிந்துவந்தார். இச்சூழலில் நேற்று முன்தினம் (டிச.9) காலை தனது அறையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் ஏற்கெனவே லைசன்ஸ் பெற்ற துப்பாக்கி வைத்திருந்துள்ளார். அதை வைத்து தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் நடந்தபோது அவர் கீழே உள்ள அறையில் இருந்திருக்கிறார். அதற்குப் பக்கத்தில் அறையில்தான் அவரின் பாட்டி உறங்கியிருக்கிறார். அவரது பெற்றோர் மாடியில் இருந்துள்ளனர். சத்தம் கேட்டு பதறியபடி கீழே வந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உடனே காவல் துறைக்கு போன் செய்து நடந்ததைக் கூறியுள்ளனர். அதற்குப் பின் சம்பவம் இடம் விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான காரணம் குறித்த கடிதம் எதையும் அவர் எழுதவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேசியளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்ற கவலை கவுன் சந்தை வாட்டி வதைத்திருக்கிறது. டீமாக இணைந்து பதக்கம் வென்றிருந்தாலும் தனியாக பதக்கம் வெல்ல முடியவில்லை என்பதே அவரின் விரக்திக்கு காரணமாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார். அவரை சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அவர் துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சந்துவுக்கு ஆலோசனை வழங்க தவறிவிட்டோம் என பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீச்சல் வீராங்கனையாக தனது கரியரை தொடங்கிய சந்து தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் ஃபரித்கோட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கிச் சுடுதல் பட்டமும் பெற்றார். 2019ஆம் ஆண்டில், சந்து 25 மீ பிஸ்டல், 10 மீ ஏர் பிஸ்டல் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளார். 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் சிவிலியன் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆனால் ஒரு தொடரில் சிறப்பாக விளையாட காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.