மீண்டும் தலைதூக்கும் ஐபிஎல் சூதாட்டம்... சென்னையில் சூதாட்ட தரகர் அதிரடி கைது!
ஐபிஎல் சூதாட்டத்திற்கு அறிமுகம் தேவை இல்லை. களத்திற்கு உள்ளேயும் களத்திற்கு வெளியேயும் சூதாட்டம் நடைபெறும். களத்திற்கு உள்ளே நிகழ்ந்த சூதாட்டத்திற்கு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இரு வருடங்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டன. அதேபோல களத்திற்கே வெளியே பல்வேறு நபர்கள் நேரடியாகவும் வலைதளம், செயலிகள் வழியாக ஆன்லைன் மூலமாகவும் சூதாட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தி வருகின்றனர். இதில் ஒருசிலர் பண மோசடி செய்து வசமாக சிக்கி கொள்கிறார்கள். அப்படி ஒருவரை தான் சென்னையில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டுக்கான எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. போட்டி ஆரம்பத்ததிலிருந்தே ஐபிஎல் சூதாட்டத்தை சென்னையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் தொடங்கியிருக்கிறார். இதற்காக கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் ஆகிய பெயர்களில் வலைதளங்களை உருவாக்கி, கவர்ச்சிக்கரமான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார். அவ்வாறு சூதாட்டம் ஆட வந்த நபர்கள் ஹரிகிருஷ்ணனிடம் பல லட்சங்களை வாரி இறைத்துள்ளனர். ஆனால் இந்தப் பணத்தை ஹரிகிருஷ்ணன் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
அவரிடம் பல லட்சம் கொடுத்து ஏமாந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஹரிகிருஷ்ணன் மீது சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அவரை தேடி வந்தனர். இச்சூழலில் இன்று மாமல்லபுரம் ராடிசன் புளூ ஓட்டலில் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும் அவரிடமிருந்து 193 கிராம் தங்கம், ரூ.24.68 லட்சம் ரொக்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், 1 ஐபேட், 1 லேப்டாப்பை ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கிரிக்கெட் மட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட போட்டிகளையும் இவர் நடத்தி வந்திருக்கிறார். இவரிடம் விசாரித்தால் பெரும் புள்ளிகள் சிக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.