3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெறுமா இந்தியா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி 3 வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ( பிப் 9) நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் எடுத்திருந்தது. 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 193 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன்படி தொடர்ந்து 2வது ஒரு நாள் போட்டியிலும், 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. மதியம் 1.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியதால் இது வெறும் சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். ஆகையால் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இப்போட்டியை வெல்ல இரு அணிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. எனினும் இந்திய அணி 3வடு போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.