தாக்காவில் ஹீரோ சாம்பியன்ஸ் டிராபி... வீரர்கள் யார்? யார்? - இந்திய அணி அறிவிப்பு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சில மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதனை படைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் பதக்கம் வென்றது. இதனால் ஹாக்கி அணிக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. இந்திய மக்களும் அவர்களைக் கொண்டாடி தீர்த்தனர்.
இச்சூழலில் அடுத்த மாதம் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை சாம்பியன்ஸ் தொடர் நடைபெறும். இதில் இந்தியா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் தென்கொரியாவை எதிர்கொள்கிறது. அதற்கான இந்திய ஹாக்கி அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் அணியை தலைமை தாங்கிய கேப்டன் மன்ப்ரீத் சிங், சாம்பியன்ஸ் தொடரிலும் கேப்டனாகவே தொடர்கிறார். ஆனால் வெண்கலம் வெல்ல முக்கியப் பங்குவகித்த மூத்த கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் இடம்பெறவில்லை. மன்பிரீத் சிங் தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் சிங் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீஜேஷ்க்கு ஓய்வளிக்கப்பட்டு, கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சூரஜ் கர்கேரா ஆகியோர் கோல்கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அணி விவரம் பின்வருமாறு:
டிஃபண்டர்கள்: ஹர்மன்ப்ரீத் சிங், குரீந்தர் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், நீலம் சஞ்சீப், டிப்சன் டிர்கி, வருண் குமார் மற்றும் மன்தீப் மோர்
மிட்ஃபீல்டர்கள்: மன்ப்ரீத் சிங், ஹர்திக் சிங், ஜஸ்கரன் சிங், சுமித், ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங்.
பார்வேர்ட் வீரர்கள்: லலித் குமார், தில்ப்ரீத் சிங், குர்ஷாஹிப்ஜித் சிங், ஷிலாநத் லக்ரா
கோல் கீப்பர்கள்: சூரஜ் கர்கேரா, கிரிஷன் பகதூர் பதக்