#Rewind2021: 121 வருட ஏக்கம்; "தங்கமகன்" நீரஜ்... இதயங்களை வென்ற மகளிர் ஹாக்கி அணி - டோக்கியோவில் நடந்தது என்ன?
சர்வதேச விளையாட்டு தொடர்களில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்கில் தங்கமோ அல்லது வெள்ளி, வெண்கலமோ வெல்வதே அவர்களின் கனவாக இருக்கும். இந்தாண்டுக்கான ஒலிம்பிக் தொடர் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதியோடு நிறைவுபெற்றது. இதில் தடகளம், வாள்வீச்சு, குத்துச்சண்ட, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் அடங்கும். இந்த தொடர் கடந்த ஆண்டே நடைபெற வேண்டியது.
ஆனால் கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. வீரர்கள், ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதிலும் ஜப்பான் நாட்டு அரசு வெற்றிக்கரமாக நடத்திமுடித்தது. இந்த ஒலிம்பிக் தொடர் இந்தியாவுக்கு ஸ்பெஷலான தொடர் தான். ஏனென்றால் வரலாற்றிலேயே அதிக பதக்கங்களை வென்றது இம்முறை தான். இந்திய ஹாக்கி அணிகள் நீண்ட காலங்களுக்குப் பின் வரலாறு படைத்தன. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரிலும் இந்தியர்கள் சாதனை படைத்தனர். அந்த நினைவலைகளை மீண்டும் அசைபோடுவோம் வாருங்கள்...
முத்தான முதல் பதக்கம் - சாதித்த மீராபாய் சானு!
ஒலிம்பிக் தொடங்கி முதல் நாளில் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவிற்குப் பின்னடைவே ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினால் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு. மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ஒரே வீராங்கனை மீரா பாய் தான். மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்தார்.
சரித்திரம் படைத்த தங்க நாயகன் நீரஜ் சோப்ரா!
ஒலிம்பிக் போட்டி நிறைவடையும் கடைசி நாள் அது. அதுவரை இந்தியாவிற்கு தங்கம் என்ற மிக முக்கிய பதக்கம் கிடைக்கவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது இல்லை என்றே அனைவரும் எண்ணினர். ஆனால் யாருமே எதிர்பாரா விதமாக ஒரு ஈட்டி பறந்துவந்தது. அந்த ஈட்டி இந்தியாவிற்கு தங்கத்தையும் சேர்த்து கொண்டு வந்தது. அதனைத் தட்டி பறித்தது நீரஜ் சோப்ரா எனும் இளஞ்சிங்கம். 23 வயது இளம் வீரரான நீரஜ் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி.
2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா. அதற்குப் பிறகு சரியாக 13 வருடங்கள் கழித்து 23 வயது இளம் வீரரான நீரஜ் தங்கத்தைத் தட்டிப் பறித்திருக்கிறார். 1896 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் ஒலிம்பிக் தடகள பிரிவில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் கூட வென்றதில்லை. அந்தக் குறையை 121 ஆண்டுகளுக்குப் பின் தீர்த்து வைத்தார் நீரஜ்.
"நாங்களும் சளைத்தவர்கள் அல்ல" - புல்ஸ்டாப் வைத்த ரவிக்குமார் தஹியா!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவைச் சேர்ந்த மகளிர் மட்டுமே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொண்டிருந்தார்கள். ஆடவர்கள் யாரும் வெல்லவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு தனியொருவனாக முற்றுப்புள்ளி வைத்தவர் ரவிக்குமார் தஹியா. ரஷ்ய வீரர் ஜாவுருடன் இறுதிப் போட்டியில் வீழ்ந்தாலும், இறுதிச்சுற்று வரை சென்றதால் ரவிக்குமாருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. சுஷில் குமாருக்கு அடுத்தப்படியாக வெள்ளி வென்ற இரண்டாம் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரவி.
பருப்பு இல்லாத சாம்பாரா? பி.வி. சிந்து இல்லாத பதக்க பட்டியலா?
தலைப்புக்கேற்றவாறு பி.வி.சிந்து இல்லாத இந்தியாவின் பதக்க பட்டியலை பார்க்க முடியுமா என்ன? பேட்மிண்டனில் புது சரித்திரம் படைத்த வீர மங்கை அல்லவா அவர். ரியோ ஒலிம்பிக்ஸில் ஜஸ்ட் மிஸ்ஸில் அவருக்கு தங்கம் பதக்கம் கிடைக்காமல் போனது. இந்தாண்டு வெள்ளியும் மிஸ்ஸாகி வெண்கலம் கிடைத்தது. இதன்மூலம் ஒலிம்பிக்ஸில் இரு பதக்கங்கள் வென்ற 2ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். மல்யுத்த வீரா் சுஷீல் குமார் மட்டுமே 2008 ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றிருந்தார்.
லவ்லினாவுக்கு கிடைத்த லவ்லி பதக்கம்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார். உலகின் நம்பர் 1 வீராங்கனையான சுர்மெனலி சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்தார். தோல்வியடைந்தாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றார் லவ்லினா.
41 வருட ஏக்கம் தீர்ந்தது... தங்கம் தான் மிஸ்ஸிங்!
ஹாக்கி விளையாட்டு இந்தியாவில் தோன்றியது. ஆனால் அந்த இந்தியா ஹாக்கியில் பதக்கம் வெல்வதே பெரும் கேள்விக்குறியாகிப் போனது. நம்மிடம் பாடம் கற்றுக்கொண்ட பல்வேறு நாடுகள் தங்கப் பதக்கங்களை வாங்கி குவிக்கின்றன. ஆனால் இந்தியாவோ காலிறுதியில் நுழைவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. 41 வருடமாக இந்திய ஹாக்கி பதக்கம் வென்றதே இல்லை. அந்த ஏக்கத்தை இந்த ஒலிம்பிக்கில் தீர்த்தது ஆடவர் ஹாக்கி அணி. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய அணி தங்கம் வென்றது. அதற்குப் பின் இந்தாண்டு தான் வெண்கலம் வென்றது.
கடைசி நாளில் கைகூடி வந்த பதக்கம்!
நீரஜ் சோப்ரா தங்கம் வெல்லும் முன்னர் கடைசி நாளில் இன்னொரு வீரரும் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் தான் பஜ்ரங் புனியா. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தம் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று பதக்கத்தை வென்றார்.
ஹார்ட், கிட்னியை வென்ற இந்திய வீராங்கனைகள்!
ஒலிம்பிக்கின் மிகச்சிறந்த கம்பேக் என்றால் அது இந்திய மகளிர் ஹாக்கி கொடுத்த கம்பேக் தான். முதல் மூன்று போட்டிகளில் மிக மோசமாக தோற்றுப்போனது மகளிர் ஹாக்கி. இதனால் காலிறுதிக்கு கூட செல்லாமல் நாடு திரும்பும் என முடிவுரை எழுதினார்கள். ஆனால் அதற்கெல்லாம் சீனே இல்லை என்பது போல் அதிரடியாக விளையாடி மாஸ் கம்பேக் கொடுத்து காலிறுதிக்குள் நுழைந்தனர் வீராங்கனைகள். சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்து நின்றனர். 41 ஆண்டுகளுக்குப் பின் காலிறுதிக்குள் இந்திய மகளிர் அணி சென்றது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
அதேபோல பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முதலாக அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் அர்ஜென்டீனாவிடம் தோல்வி, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இங்கிலாந்துடம் போராடி தோல்வி என பதக்கம் இல்லாமல் நாடு திரும்பினார் ஹாக்கி வீராங்கனைகள். இருந்தாலும் இந்தியர்களின் இதயங்களை வென்றுவிட்டார்கள். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் நிச்சயம் என்பது மட்டும் திண்ணம்.
பாராலிம்பிக்கில் மாஸ் காட்டிய இந்திய வீரர், வீராங்கனைகள்!
ஒலிம்பிக் முடிந்தபிறகு டோக்கியோவில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கியது மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள். செப்டம்பர் 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 9 வகையான விளையாட்டுகளில், 54 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.. பாராலிம்பிக்கில் 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார்.