உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி - நாளை தொடக்கம்

 
INDvsAUS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெறுகிறது. இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி விட இந்திய வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரையில், பேட்டிங்கில் வலுவான நிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், விராட் கோலி, சுப்மன் கில், ரஹானே உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் இருந்தனர். இதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாராவும் அணியில் உள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

அதே உத்வேகத்தை டெஸ்ட் போட்டியிலும் காட்டினால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடலாம். இதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சுழலில் மிரட்டுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சாதாரண அணியாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் அந்த அணி கோப்பையை வெல்ல முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.