பிரபல அமெரிக்க நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர்... Veeam சிஇஒவாக ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்!
வல்லரசு நாடுகளிலுள்ள முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களே கோலோச்சுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பெரு நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களைத் தான் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்க விரும்புகின்றனர். கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் வித்திட்டவர் சுந்தர் பிச்சை தான். தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் (Alphabet) தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருக்கிறார்.
அதேபோல மைக்ரோசாப் சிஇஓவாக சத்ய நாதெள்ளா, ஐடி துறையில் மிகச்சிறந்த நிறுவனமான ஐபிஎம் (IBM) சிஇஓவாக அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் செயல்படுகின்றனர். அடோப் நிறுவனத்தின் சிஓவாக சாந்தனு நாராயணன், சமீபத்தில் ட்விட்டரின் சிஇஓவாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால் வரை அனைவரும் இந்தியர்கள் தான். தற்போது இவர்கள் வரிசையில் ஆனந்த் ஈஸ்வரனும் இணைந்திருக்கிறார். வீம் சாப்ட்வேர் (Veeam Software) சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனம் தான். Veeam-இல் சேர்வதற்கு முன்பு, ஈஸ்வரன் RingCentral Inc நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை இயக்க அதிகாரியாகவும் இருந்தார். மேலும் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பணிபுரிந்த அனுபவமும் இருக்கிறது. அங்கு தொழில்துறை மற்றும் டிஜிட்டல், வாடிக்கையாளர் பராமரிப்பு பிரிவில் பணியாற்றினார். மும்பை பல்கலைக்கழகத்தின் கம்யூட்டர் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், கொலம்பியாவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படித்து முடித்துள்ளார்.