"எதிர்பார்க்காத ட்விஸ்ட்... 7 கோடி பேஸ்புக் பயனர்கள தட்டி தூக்கிட்டோம் ” - குஷியில் டெலிகிராம் ஓனர்!
உலகம் முழுவதும் கடந்த 4ஆம் தேதி பேஸ்புக் குழுமத்தின் செயலிகளான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய முடங்கின. இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது என பேஸ்புக் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு இந்தச் செயலிகள் எதுவுமே வேலை செய்யவில்லை. இதனால் அதனைப் பயன்படுத்திய பயனர்களுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. தங்களுடைய சிம் சிக்னல் பிரச்சினை என சிலரும், போனில் தான் பிரச்சினை என சிலரும் நினைத்துக்கொண்டு இல்லாத வித்தைகளை செய்து பார்த்தனர்.
பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் வண்டி ஒரு இன்ச் நகராது என்பது போலவே மூன்று செயலிகளும் வேலை செய்யாமல் போக்கு காட்டின. இப்படி செய்தவர்கள் ஒருமுறையாவது கூகுள் செய்து பார்த்திருக்கலாம். கடைசியில் அவர்கள் வேறு வழியில்லாமல் உறங்கியது தான் மிச்சம். பேஸ்புக் சர்வர் பிரச்சினை என்று உணர்ந்த ஒருசில நெட்டிசன்கள் ட்விட்டருக்கு படையெடுக்க அதுவும் கொஞ்ச நேரத்தில் முடங்கியது. அதற்குப் பின் தான் அவர்களின் கண்களுக்கு டெலிகிராம் என்ற தேல்பத்ரி சிங் அகப்பட்டது. ஆபத்து பாவம் இல்லை என்பது போல எல்லோரும் டெலிகிராமில் இணைந்தனர்.
இந்த 7 மணி நேர முடக்கத்தில் கிட்டத்தட்ட 70 மில்லியன் அதாவது 7 கோடி பேஸ்புக் குழும (பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா) பயனர்கள் டெலிகிராமில் இணைந்திருக்கிறார்கள். இதனை டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் உறுதிப்படுத்தினார். இது ஒரு எதிர்பாராத வரவேற்பு என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், தங்களுடைய வெற்றிப்பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார். அதிகளவில் பயனர்கள் இணைந்திருப்பதால் டெலிகிராமின் வேகம் சற்று குறைந்திருப்பதாகவும், சில நாட்களில் அது சரிசெய்யப்பட்டு விடும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
பேஸ்புக் குழுமத்திற்கு பயனர்கள் மட்டும் லாஸ் இல்லை. அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்கு சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருடைய சொத்துமதிப்பு ரூ.52 ஆயிரம் கோடி குறைந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் புதிய தனியுரிமைக் கொள்கையைக் கொண்டுவந்தது. அதன்மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் போன்ற மூன்றாம் தர செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக கூறியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த அப்போதே பல கோடி மக்கள் டெலிகிராமில் இணைந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.