ஆவடி இரட்டைக்கொலை வழக்கு: 10 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை..
ஆவடி ஓசிஎஃப் மைதானத்தில் மீன்வியாபாரி தொழிலாளி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓ.சி.எஃப் மைதானத்தில் நேற்றிரவு ஆவடி கௌரிபேட்டை மசூதி தெருவை சேர்ந்த மீன் வியாபாரி அசாருதீன்(27), ஆவடி வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர்(29) ஆகிய இருவரையும் மர்மமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆவடி காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் அருகே முகங்கள் சிதைக்கப்பட்டு கோரமான முறையில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆவடி கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவருக்கும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று ஜெகன், அவரது கூட்டாளிகளான அசாருதீன், சுந்தர் உள்ளிட்ட சிலர் ஓசிஎஃப் மைதானத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் உள்ளிட்ட 10 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் ஜெகன் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். ஆனால் அசாருதீன் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை சுற்றி வளைத்த மணிகண்டனின் கூட்டாளிகள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முகத்தையும் சிதைத்துவிட்ட கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.
குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் , கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் உள்பட 10 பேரை தற்போது கைது செய்துள்ளனர். அவர்களை ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த அசாருதீனின் மனைவி ஹௌரி தற்போது 9 மாத கர்ப்பமாக உள்ளார். அதேபோல் சுந்தருக்கு பிரியா என்கிற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். முன்விரோதத்திற்கும், பகைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.