சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!!
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் , "தினமும் 3,233 மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளால் மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது அரசின் கட்டுப்பாடுகள் முழுமையாக விளக்கப்பட்ட நிலையில் , போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது . தினசரி 30 லட்சம் பயணிகள் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பணிமனைகளில் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்றும் பல்வேறு பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வருகிறது. சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் இயக்கம் என்பது உரிய அட்டவணைப்படி இயக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வருகின்றன.
எனவே, தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்கவும், பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், சாதாரண பேருந்துகளின் 100% இயக்கத்தை உறுதிப்படுத்தவும், கடைசி பேருந்துகள் மற்றும் இரவு பேருந்துகளை NOT RUN இன்றி சரியாக இயக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.