10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அத்துடன் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆறாம் தேதி மொழித்தாள் பாடம் நடைபெற்ற நிலையில் 18ஆம் தேதி ஆங்கில தாளும், 21 ம் தேதி தொழில்முறை பாடமும், 24ஆம் தேதி கணிதமும் , 26ம் தேதி அறிவியலும் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் தேர்வின் இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி 1 :15 வரை தேர்வு நடைபெறும். அந்த வகையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. 10ம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.மே 10ல் துவங்கிய பிளஸ் 1 தேர்வு நாளை முடிய உள்ளது குறிப்பிடத்தக்கது.