வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு..
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு செய்திக்குறிப்பில், “மாண்பமை உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது. மாண்பமை உச்சநீதிமன்ற வழங்கிய ஆணையின்படி,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.