புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கு முழு பட்ஜெட் - திட்டக் குழுவில் முடிவு..

 
ரங்கசாமி

புதுச்சேரியில் 2023- 24 ஆம் நிதி ஆண்டிற்கு 11, 600 கோடி ரூபாய்க்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டு,  மத்திய  அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க திட்ட குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.  இந்த நடைமுறையை மாற்றி 2023- 24 ஆம் நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்  மாநில திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி,  அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழிசை

இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் கூட்டம்  முடிவு முடிந்த பிறகு ஆளும் கட்சி தரப்பில் யாரும் பதில் தராமல் புறப்பட்டு விட்டனர். இந்த நிலையில் 2023 -24ம் நிதியாண்டில்  11,600 கோடி ரூபாய்க்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யவும்,  இதனை  மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்க திட்ட குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் தலைவர் சிவா கூறியுள்ளார்.