12 மணிநேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு!

 
assembly

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த 21 தேதி  நிறைவேற்றப்பட்டது.  இந்த நிலையில்  தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவித்துள்ளன. அன்றைய தினம் பேருந்து மற்றும் ஆட்டோக்களை தொழிற்சங்கத்தினர் இயக்கமாட்டார்கள் என்று சிஐடியூ மற்றும் ஏஐடியூசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில்  இன்று கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி இதற்கான வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டத்துறைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்களை கவர்னருக்கு அனுப்பும் முன் திரும்பப் பெறும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.  12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்கின்றனர்.