டெங்கு பாதிப்பால் 12 வயது சிறுமி மரணம்!

 
ttn

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பால் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ள போதிலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுமி டெங்கு பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் வசித்து வரும் விஜயகுமார் என்பவரது மகள் ஸ்ருதி. இவர் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். சிறுமி ஸ்ருதி மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை  மோசமானதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்த நிலையில் இன்று சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.