கார்த்திகை தீபத்தையொட்டி 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு.. டிஜிபி நேரில் ஆய்வு..

 
ஆறாம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்றும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளையும் நடைபெற இருக்கிறது.  மேலும் 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு  கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்படுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

ஆனால் இந்த ஆண்டு மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் 27 ஆயிரம் பஸ்களிலும், 12 ஆயிரம் கார்களில் இருந்தும், ரெயில் மூலமும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்காக 59 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் கண்டறியப்பட்டு உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பை கருதி தற்போது இருந்தே வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இந்த மாவட்டத்தில் முன்பு வேலை பார்த்த அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அந்தந்த பகுதியை சேர்ந்த குற்ற தடுப்பு போலீசார் சாதாரண உடையில்  மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களிலும்,  கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சிசிடிவி

இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பணி திருவண்ணாமலையில் தொடரும். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் பரணி தீபத்திற்கும், மகா தீபத்திற்கும் எவ்வளவு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளார்களோ அதே அளவு பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டும் அனுமதிக்க முடியும். கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின்போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று தெரிவித்தார்.