12 மணி நேர வேலை மசோதா : தொழிற்சங்கங்களுடன் 24-ந்தேதி அமைச்சர்கள் ஆலோசனை

 
 தமிழக சட்டப்பேரவை

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு தொடர்பாக நாளை மறுநாள் ( ஏப்-24)  தலைமை செயலகத்தில் தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில்  தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு நேற்று சட்டப்பேரவையில்  தாக்கல்  செய்யப்பட்டது.  மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். அப்போது  திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும்,  பாமக, பாஜக ஆகிய கட்சிகளும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும், மசோதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  
 12 மணி நேர வேலை மசோதா : தொழிற்சங்கங்களுடன் 24-ந்தேதி அமைச்சர்கள் ஆலோசனை
 இந்த  மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து, ஒன்றிய அரசினுடைய தொழிலாளர் நலச்சட்டத்தில் இருந்து தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்திருக்கும் இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை விளக்கமாக எடுத்துரைத்துக்கப்பட்டது. அத்துடன்,  இந்த திட்டத்திற்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள், பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டபேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள்  விளக்கம் அளித்துள்ளனர்.  

இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் வரும் 24-4-2023 (திங்கள்கிழமை) அன்று மதியம் 3-00 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.   தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் இந்த  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.