12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் - அன்பில் மகேஷ்

 
 பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி நிறைவடைந்தது.  தமிழ்நாடு மற்றும் புதுவையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என   8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் சுமார்  79 மையங்களில் ,  ஏறத்தாழ 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் விடித்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ்

விடைத்தாள் திருத்துவது மற்றும் மதிப்பெண்களை பதிவேற்றம் பணிகள்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இந்நிலையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்  மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், நீட் தேர்வுக்கு பிறகு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்கு பின்பாக வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்..” என்று தெரிவித்தார்.  மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம்  20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,  தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வெழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.