+2 துணை தேர்வுக்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

 
exam exam

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 03ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7.92 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 4.19 லட்சம் மாணவிகளும், 3.73 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினர். 10,049 பேர் தேர்வை எழுதவில்லை. இந்த நிலையில், மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. +2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் வரும் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.