12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு

 
vilupuram

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தற்கொலைக்க்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரையாண்டு தேர்வின் போது அந்த மாணவி தேர்வில் காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர்கள் இது தொடர்பாக பெற்றொருக்கு தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தேர்வில் காப்பி அடித்த காரணத்திற்காக டிசியை பெற்றுக்கொள்ளுமாறு தனியார் பள்ளி ஆசிரியர்கள் அந்த மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், வீட்டிற்கு சென்ற அந்த மாணவி மிகுந்த மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.