தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை - 413 மார்க் எடுத்து தேர்ச்சி!
May 8, 2025, 11:53 IST1746685381625
தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவி 413 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 03ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7.92 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 4.19 லட்சம் மாணவிகளும், 3.73 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதினர். 10,049 பேர் தேர்வை எழுதவில்லை. இந்த நிலையில், மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வை எழுதிய மாணவர்களில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4.05 லட்சம் மாணவிகளும், 3.47 லட்சம் மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தஞ்சையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவி 413 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என எண்ணி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த மாணவி 413 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.


