தொட்டிலில் கழுத்து மாட்டி 13 வயது சிறுவன் உயிரிழப்பு! விளையாடும்போது நேர்ந்த சோகம்

 
ச் ச்

ஆவடியில் குழந்தைக்காக கட்டி வைத்த தொட்டிலில் 13 வயது சிறுவன் விளையாடிய போது கழுத்து மாட்டி கொண்டு சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Death

ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (41).ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மீனா (38) என்பவருடன் திருமணம் ஆகி 15 வயதில் பவ்யஸ்ரீ என்ற மகளும்,13 வயதில் ஹரிஹரன் என்ற மகனும் உள்ளனர். இதில் பவ்யஸ்ரீ தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பும், ஹரிஹரன்  எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சதீஷின் மனைவி மீனாவின் உறவினர் பெண்ணான ஆந்திராவை சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சதீஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தைக்காக சதீஷ் வீட்டின் மேல் மாடியில் படுக்கை அறையில் குழந்தைக்காக புடவையில் தொட்டில் கட்டப்பட்டிருந்தது. நந்தினி பிரசவம் முடிந்து ஆந்திராவிற்கு சென்றபோதும் குழந்தைக்காக கட்டப்பட்ட தொட்டில் கழட்டாமல் அப்படியே இருந்துள்ளது.

 இந்த தொட்டிலில் ஹரிஹரன் சென்று விளையாடுவது வழக்கம். இதனால் அவரது பெற்றோரும் தொட்டிலை கழட்டாமல் அப்படியே வைத்து வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் சதீஷின் மனைவி மீனா அவரது மகள் பவ்யஸ்ரீ இருவரும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்  போல் ஹரிகரன் புடவையால் கட்டிய தொட்டிலில் விளையாடிய போது தொட்டில் முறுக்கிக் கொண்டு கழுத்தில் சிக்கி உள்ளது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹரிகரன் மயங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பின்பு வீட்டிற்கு வந்து மகனை தேடிய மீனா மாடியில் உள்ள அறையில் புடவை கழுத்தில் சிக்கி இருந்த மகனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகே இருந்த  கத்தியை கொண்டு புடவையை அறுத்து எடுத்த மீனா  மகனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதை உறுதி செய்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ஆவடி காவல்துறையினர் சிறுவன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்காக கட்டிய தொட்டிலில் சிறுவன் சிக்கிக் கொண்டு உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.