அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 15க்கும் மேற்பட்டோர் காயம்

 
Marakkanam

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

நாகையில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை நேரத்தில் வந்துகொண்டிருந்த போது தாழங்காடு என்ற பகுதியில் திடீரென அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய அந்த பேருந்து சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அலறல் சத்தக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

மேலும் இதுகுறித்து மரக்காணம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.