சென்னையில் 18 குப்பையில்லா சாலைகள்.. அபராதம் விதிக்கவும் ஏற்பாடு - மேயர் பிரியா தகவல்..

 
குப்பையில்லா சாலை

சென்னையில் முதற்கட்டமாக 18 சாலைகளை குப்பையில்லா சாலைகளாக பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  அந்த சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும்  மேயர் ஆர்.பிரியா  தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சராசரியாக  நாள் ஒன்றுக்கு  5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுவீடாகச் சென்று குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக தரம்பிரித்து பெறப்படுகிறது. அதேபோல் தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில்   மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பையில்லா சாலை

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள்  (Litter Free Corridors) என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக  பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜிவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை, எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, உள்ளிட்ட 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இந்த சாலைகளில் மாநகராட்சி  சார்பில் குறிப்பிட்ட  இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.

குப்பையில்லா சாலை

அத்துடன்  சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட இருக்கிறது.    இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும் என மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குறிப்பிட்ட சாலைகளில் குப்பைகளை வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.