சென்னை- கும்மிடிப்பூண்டி மார்கத்தில் 18 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை – கும்மிடிப்பூண்டி மார்கத்தில் இன்று 4மணி நேரம் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள், மறு மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும் 2 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் வசதிக்காக பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் வரை 10சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனிடையே கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளங்களை வெட்டி அகற்றி எடுத்து உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லி கலவைகளை அப்புறப்படுத்தி உறுதித் தன்மையை சோதித்து மீண்டும் அதன் மீது தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மண் உறுதித் தன்மை இல்லாத இடங்களில் பரிசோதனை மேற்கொண்டு அந்த குறிப்பிட்ட இடங்களில் தண்டவாளங்களை அப்புறப்படுத்தி மீண்டும் ஜல்லி கலவைகளை கொட்டி உறுதிப்படுத்தி மீண்டும் தண்டவாளத்தை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு வழிப்பாதைகளிலும் தண்டவாளத்தை அகற்றி உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


