இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்கள்.. 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..
இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்கிற 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் வருகிற 23 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை இந்திய ஹாக்கி அணி, 11வது ஆசிய கோப்பை போட்டியில் விளையாட உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெறும். தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி( ஆண்கள் ) அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபிந்தர்பால் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள, இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர்களான கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.மாரீஸ்வரன், அரியலூரைச் சேர்ந்த எஸ்.கார்த்தி ஆகிய 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவர் மூலம் கடந்த 13 ஆண்டுகளாக, இந்திய ஹாக்கி அணியில் தமிழக வீரர் இல்லை என்கிற கவலை தீர்ந்திருக்கிறது. கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த குணசேகர் மற்றும் நவீன் ஆகியோ ஆசிய கோப்பை போட்டியி விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகியிருப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அதில், “இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது. ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஹாக்கி (ஆண்கள்) அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்ற 13 ஆண்டுக் காத்திருப்பு கோவில்பட்டி மாரீஸ்வரன் மற்றும் அரியலூர் கார்த்தி ஆகிய இருவரால் முடிவுக்கு வந்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) May 11, 2022
ஜகார்த்தா ஆசிய கோப்பையை மட்டுமின்றி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் வென்று காட்ட வாழ்த்துகிறேன்! https://t.co/Nrs0t3J6A6