தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு..
கோவில் திருவிழாக்களை முன்னிட்டு தேனி மாவட்டத்துக்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் அரசு விடுமுறை விடப்படுகிறது. இவைதவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் திருவிழா போன்ற முக்கிய கோயில் விழாக்களின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தேனி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழக-கேரள மாநில எல்லையில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில், மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் இருமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி திருவிழா நடைபெறும் அன்றையதினம் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 20-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 12-ந்தேதி தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 27-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.