40 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சாமி சிலைகள் .. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு..

 
சிலைகள்

தமிழக கோயில்களில் இருந்து  திருடுபோன  2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமை வாய்ந்த  கோயில்கள் உள்ளன.  இந்த கோயில்களில்  அயிரக்கணக்கான  கலை நயம்மிக்க பழமையான  தொன்மைவாய்ந்த  விலை மதிப்பற்ற கற்சிலைகள்,  உலோகச் சிலைகள், ஐம்பொன் சிலைகள்  உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து  இந்த  விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.   அங்கு சட்ட விரோதமாக  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழக கோயில்களில் இருந்து   திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் குறித்து, விசாரணை மேற்கொண்டு   சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் அவற்றை  மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

40 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சாமி சிலைகள் .. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு..

இந்நிலையில், நாகை திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்த  தேவி மற்றும்  விநாயகர் சிலைகள்   திருடுபோனதாக பாலு என்பவர் புகார் அளித்திருந்தார்.  பின்னர் புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  நடத்திய விசாரணையில் 11 சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது.  அதன்படி சோமாஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி அம்மன், நவக்கிரக சூர்யா, போக சக்தியம்மன், நடன சம்பந்தர், அம்மனுடன் சந்திரசேகர், நின்ற சந்திரசேகர் மற்றும் நின்ற விநாயகர் சிலை உள்ளிட்ட 11 சிலைகள் திருடுபோயிருந்தது.

சிலைகள்

 தற்போது  அந்த சிலைகளில் தேவி மற்றும் விநாயகர் சிலை இரண்டும்  அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவர்துள்ளது.   அந்தச் சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.   காணாமல் போன  மீதமுள்ள சிலைகளை கண்டறியும் முயற்சியிலும்  சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த இரண்டு சிலைகளும் 1970ம் காலகட்டத்தில் விற்பனை செய்திருப்பதும்,  சிலை கடத்தல் மன்னன் சுபாஷுக்கும் இதில் முக்கிய தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த  2 சிலைகளையும் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.