மேட்டுப்பாளையம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - காவலர் பலி!

 
cbe accident

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகேந்திரன் (41). இவர் கோவை கருமத்தம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு பணி முடிந்து, பாலுமகேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேரம்பாளையம் சாலையில் சென்றபோது பாலுமகேந்திரனின் இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

coimbatore

இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட காவலர் பாலு மகேந்திரன் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த நபரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே காவலர் பாலுமகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நபருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரமடை போலீசார், காவலர் பாலுமகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.