பட்டாசு கடையில் திடீர் தீ - 5 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 
fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில், இன்று தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் கடையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த தீ விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.  மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.