தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது..!

 
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது..!

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள்  இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது.   இந்த நாளில்  மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

திரௌபதி முர்மு 
செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று டெல்லியில்  நடைபெறும் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்க உள்ளார். விருது பெறும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி பதக்கமும், 50 ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களின் சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பிலும் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.