ஒரே மாதத்தில் 2வது முறையாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை..
வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மாற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாயாக இருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில், கடந்த 7 ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1, 015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அதன்படி 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,018 ஆக விற்கப்படுகிறது. இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ. 2,507 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் சிலிண்டர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒரே ஆண்டில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 193 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.