திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு!

 
child

திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை 12 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் மீட்கப்பட்டது. 

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்-மீனா தம்பதி தனது 2 வயது குழைந்த அருள்முருகனுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தனது குழந்தைக்கு மொட்டையடித்து முடிக்காணிக்கை செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். பேருந்து நிலையத்தில் நள்ளிரவு குழந்தையுடன் தூங்கியுள்ளனர். இந்த நிலையில், திடீரென குழந்தை பேருந்து நிலையத்தில் இருந்து மாயமானது. இதன் காரணமாக குழந்தை கடத்தப்பட்டதாக எண்ணி உடனடியாக திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 திருப்பதி

இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குழந்தையை தீவிரமாக தேடினர். இந்த நிலையில், நள்ளிரவு காணாமல் போன குழந்தை காலையில் மீட்கப்பட்டது. சுமார் 12 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.