அரசு சொகுசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 20 பயணிகள் படுகாயம்
திருச்சியில் அரசு சொகுசு பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்து ஒன்று மொத்தம் 49 பயணிகளுடன் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி அருகே மஞ்சகோரை பகுதியில் பேருந்து வந்துகொண்டிருந்த போது, அங்குள்ள வளைவு ஒன்றில் ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பேருந்தில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.