"நெஞ்சு வலி.. கரகர குரல்"... ஒமைக்ரானுக்கு 20 அறிகுறிகள் - இதெல்லாம் இருந்தா உடனே ஹாஸ்பிட்டலுக்கு ஓடுங்க மக்களே!
உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரே வார்த்தை ஒமைக்ரான் தான். காரணம் ஒரே மாதத்தில் உலக நாடுகள் பலவற்றில் பெரிய அலைகளை ஏற்படுத்திவிட்டது. மற்ற வைரஸ்களை விட ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவுகிறது. நாடுகளின் கோவிட் தடுப்பு நிபுணர் குழு, உலக சுகாதார அமைப்பு என அனைவரது கணிப்பையும் தூள் தூளாக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. அனைவரது வீட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வந்துவிட்டே செல்லும் என சொல்லப்படுகிறது.
ஆகவே அதிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள ஒரேயொரு விஷயம் மட்டும் தான் செய்ய வேண்டும். அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவமனை சென்று பரிசோதனை மேற்கொள்வது. எவ்வளவு சீக்கிரம் பரிசோதனை செய்துகொள்கிறாமோ அவ்வளவு விரைவாகவே நாம் குணமடைந்துவிடலாம். பரிசோதனையில் தொற்று உறுதியானால் அதற்கேற்ப சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு பூரண குணமடையலாம். ஆனால் இதற்கெல்லாம் அறிகுறிகள் என்னென்ன நாம் தெரிந்துகொள்வதும் அவசியம். ஒமைக்ரானை பொறுத்தவரை ஆரம்பத்தில் மற்ற கொரோனா உருமாற்றங்கள் ஏற்படுத்திய அறிகுறிகளை தான் உண்டாக்கியது.
ஆனால் தற்போது புதிய அறிகுறிகளும் தென்படுகின்றன. அதாவது நகம், தோல், உதடுகளில் அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (சிடிசி) அறிவித்திருந்தது. அதன்படி ஒமைரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல், உதடு, நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். தோல் வெளுத்து போகும் வாய்ப்புள்ளது. சிலருக்கு தோல் நீல நிறத்திற்கு மாறலாம். உதடு, நகம் ஆகிவையும் வெளுத்து போகவோ, நீல நிறத்திற்கு மாறலாம் என சொல்லப்பட்டது. அந்த வகையில் மேலும் சில அறிகுறிகளை இணைத்து மொத்த அறிகுறிகளையும் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே இந்த அறிகுறிகள் யாருக்கேனும் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1.தலைவலி
2. மூக்கு ஒழுகுதல்
3. சோர்வு
4. தும்மல்
5. தொண்டை புண்
6. தொடர் இருமல்
7. கரகரப்பான குரல்
8. குளிர் அல்லது நடுக்கம்
9.காய்ச்சல்
10.தலைச்சுற்றல்
11.மந்தநிலையில் சுறுசுறுப்பில்லாத மூளை யோசனை திறன்
12. வாசனை மாற்றம்
13. கண் வலி
14.கடுமையான தசை வலி
15. பசியின்மை
16. வாசனை இல்லாமை
17.நெஞ்சு வலி
18. சுரப்பிகளின் வீக்கம்
19. பலவீனம்
20.தோல் பகுதியில் தடிப்புகள்