10.50% இட ஒதுக்கீடு கேட்பது நியாயமா? 20% MBC இட ஒதுக்கீட்டில் பெருமளவில் பயன்பெறுபவது வன்னியர்களே!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பது RTI மூலம் தெரியவந்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% சதவீத உள் ஒதுக்கீடு கோரி பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்கள் கேட்கும் ஒதுக்கீட்டை விடவும் தற்போது உள்ள 20% சதவீத எம்.பி.சி. ஒதுக்கீட்டில் அதிகளவு வன்னிய சமூக மக்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்விச் சேர்க்கையில் பயன்பெற்று வருவது RTI மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த கொண்டயன்கோட்டை மறவன் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டதாகக் கூறி, டி.டி.நெக்ஸ்ட் என்ற ஆங்கில நாளிதழ் சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை MBBS படிப்பில் சேர்ந்த 24,330 மாணவர்களில் 4,873 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் DNCக்கான 20% இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டனர். 4,873 பேரில் 2,781 பேர் வன்னியர்கள் (11.4%). மற்ற அனைத்து MBC சமூகங்களையும் சேர்ந்தவர்கள் 1,414 மாணவர்கள் (5.8%) மட்டுமே. மீதமுள்ள 678 இடங்கள் DNC மாணவர்களுக்கு கிடைத்தன. BC, MBC மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் பொதுத் தகவல் அலுவலரிடம், ஜூலை 31ஆம் தேதி, சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பாமக விடுக்கும் 10.5% கோரிக்கை வன்னியர்களுக்கு எதிரானது என்பதை காட்டுகிறது.
எம்பிபிஎஸ் சேர்க்கை போலவே மற்ற உயர்கல்வி சேர்க்கையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்கள் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் போன்றவை மூலம் அரசு வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவ வாய்ப்பு பாமக கோரிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டை விட அதிகமாக இருப்பதை ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் அம்பலமாகியுள்ளது.


