ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 200 புதிய வாகனங்கள்
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 200 புதிய வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 30 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அவ்வொன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தபோது, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன. 13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.