24 மண்டலங்களாகும் சென்னை மாநகராட்சி
கடந்த 2011 ஆம் ஆண்டில் 10 மண்டலங்கள் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு 15 மண்டலங்களாக அதிகரித்தது. 23 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.
இதன் காரணமாக சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப மண்டலங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 15 மண்டலங்களில் 200 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி விரைவில் 24 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்ப மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்து அரசின் ஒப்புதலுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.