திருப்பதி அருகே செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது!

 
Tirupathi

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தியதாக 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷால காடுகளில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. செம்மரங்களுக்கு சர்வதேச அளவுகளில் நல்ல மதிப்பு உள்ளதால் அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், அம்மாநில காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க அதிரடிப்படை சார்பில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பது அருகே செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள காடுகளை சுற்றி வளைத்த போலீசார் செம்மரக்கட்டைகளை வெட்ட முயன்றதாக 5 தமிழர்களை கைது செய்தனர். பிஞ்ச தும்மல் பைலுவில் 5 பேரும், பீலேர் வனப்பகுதியில் 20 பேரும் செம்மரக்கடை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழர்களிடம் இருந்து 19 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கம் என கூறப்படுகிறது.