பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் : ராமதாஸ் வலியுறுத்தல்!!

 
money

பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக அறிவித்து, முன்பணத்தை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PMK

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தீப ஒளித் திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு இன்னும் ஊக்கத்தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படவில்லை. இந்தத் தாமதத்தால் பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் குடும்பத்தினர் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக அரசுக்கு சொந்தமாக 70-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுவதற்காக ஊக்கத்தொகையும், முன்பணமும் வழங்கப்படுவது வழக்கமாகும். தீப ஒளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இவை வழங்கப்பட்டு விடும். அவ்வாறு வழங்கினால் தான் தீப ஒளி கொண்டாடத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், நவம்பர் மாதம் 4-ஆம் நாள் தீப ஒளித் திருநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இதுவரை ஊக்கத் தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் கூட எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திலும் தென்படவில்லை.

stalin

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் பெரியவை அரசுப் போக்குவரத்துக் கழகங்களும், மின்சார வாரியமும் தான். இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கூட தங்களின் குடும்பத்தினருடன் கொண்டாட முடியாத அளவுக்கு பணி செய்ய நேரிடும். தீப ஒளி காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதால் மின் வாரியப் பணியாளர்களும், தீப ஒளிக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதால் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களும் தீப ஒளிக்கு முன்பாக குறைந்தது பத்து நாட்களாவது விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும். அதனால் அதற்கு முன்பாகவே தீப ஒளிக்குத் தேவையான  அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக குறைந்தது 15 நாட்களுக்கு முன்பாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு இதுவரை ஊக்கத்தொகை வழங்கவில்லை.

money

கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை குறித்து பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் முன்னிலையில் ஜனநாயக முறைப்படி பேச்சுக்கள் நடத்தப்படும். அதில் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்  வகையில் ஊக்கத்தொகையின் அளவு தீர்மானிக்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பேச்சு நடத்தும் வழக்கம் கைவிடப்பட்டு, அரசே தன்னிச்சையாக ஊக்கத்தொகையை அறிவித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20% அல்லது அதற்கும் குறைவான அளவில் தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி ஊக்கத்தொகை அளவு 10% ஆக குறைக்கப்பட்டது. நடப்பாண்டில் ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பே வெளியாகவில்லை.

ஊக்கத்தொகை தாமதப்படுத்தப்பட்டு, தீபஓளி நெருக்கத்தில் வழங்கப்பட்டால் அவர்களின் குடும்பங்களால்  திருநாளுக்கு தயாராக முடியாது. அதுமட்டுமின்றி தீப ஒளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பணியாளர்கள் விடுப்பு எடுத்தால் அது பணியை பாதிக்கக்கூடும். இவற்றைக் கருத்தில் கொண்டு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக அறிவித்து, அதையும், முன்பணத்தையும்  நடப்பு வாரத்திற்குள்ளாக அனைவருக்கும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 20% ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுவதால், நடப்பாண்டில் அதை 25% ஆக உயர்த்தி வழங்கவும் அரசு முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.