வைகை அணையில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை ..
வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. தொடர்மழை மற்றும் நீர்வரத்து காரணமாக இந்த அணையின் தற்போதைய நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . தற்போது அணைக்கு வினாடிக்கு 2, 094 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் வைகை அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 699 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் தற்போதைய நீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடியாக உள்ளது . அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை நிரம்பும் தருவாயை எட்டியுள்ளது. ஆகையால் தற்போது 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் . மேலும் வைகை ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க கூடாது எனவும், ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.