3 மாத பெண் குழந்தை வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு
ஆம்பூரில் 3 மாத பெண் குழந்தை வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்தலேகம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா - அர்ஷியா தம்பதியினர். அக்பர் பாஷா தனியார் தொழிற்சாலையில் கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அர்ஃபலா பாத்திமா வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாக குழந்தையின் உறவினர்கள் குழந்தையை, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நகர போலிசார், மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத நிலையில் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது? என சந்தேகத்தின் பேரில் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் 3 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் ம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


